10 Jul 2010

சிங்கார சென்னையா? இல்லை,இல்லை அசிங்க சென்னையா?

சென்னை பட்டினம் மேல் ஒரு போதும் மதிப்பு-ஆசை இருந்தது இல்லை. ஆகினும் வேலை வாய்ப்பு அங்கு கொட்டி கிடக்கின்றது என அறியும் போது சென்னையை வெறுக்கவும் முடியவில்லை. கடந்த முறை நேர்முக  தேர்வுக்கு வந்த போது என் கல்லூரி தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன்.அருமையான அடுக்குமாடி குடியிருப்பு. அவர்கள் சொந்தமாகவே வாங்கி குடியிருப்பதால் மட்டுமல்ல , காற்றோட்டமான வீடு, வீட்டுக்கு சுற்றுபுறவும் தூய்மை,குடியிருப்பு பகுதியும் நகரத்தின் அமர்க்களம் அற்று அமைதியாக காட்சி அளித்தது. வீடு இருக்கும் பகுதியோ அம்பத்தூர், எனக்கு செல்ல வேண்டியதோ  தாம்பரம் பக்கத்திலுள்ள கல்லூரிக்கு! காலை 7.30 க்கு  புறப்பட்டு 9.45  ஆகியும் செல்லும் இடம் சென்றடைய முடியவில்லை. பேருந்தில் இருந்து ஒரு நிறுத்ததில் இறங்கி ஆட்டோவில் சென்றோம் ரூ.300 கொடுக்க வேண்டியிருந்தும்
நேரம் தவறாது நேர்முகத் தேர்வுக்கு சென்றதில் திருப்த்தி அடைந்தோம்  .

இம்முறை (கடந்த திங்கள் ) நேர்முக தேர்வு வேளச்சேரியாக இருந்ததாலும், அமெரிக்காவில் இருந்து வந்த  கணவருடைய சகோதரியை பார்க்கவும், குடும்ப உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என்ற பன்முக தேவை இருந்ததால் வேளச்சேரியில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்க முடிவு செய்யும் சூழலுக்கு தள்ளபட்டோம்.
கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை ,சிங்கார சென்னை என்று துணை முதல்வர் மட்டுமே அழைக்க வேண்டும்.வெறும் தூறல் மழைக்கே  எங்கு நோக்கினும் தண்ணீர் தேங்கி அசிங்க சென்னையாக காட்சி தருகின்றது. நடபாதைமக்கள்   சர்க்கசில் கோமாளி கயற்றின் மேல் நடப்பது போல் தான்
நடக்க வேண்டியுள்ளது.
நெல்லையை மழைக்காலங்களில் காணும் போது கொதிச்சு போவது உண்டு ஆனால்  சுத்தம் என வரும் போது பட்டணம்,  பட்டினம் என பாகுபாடில்லாது எல்லா ஊர்களுமே அசுத்தமாக இருப்பதில் ஒற்றுமையாக உள்ளது.
அரசு துறை சிறப்பாக கார்ப்பரேஷனின் பணி மக்களிடம் வரி வசூலிப்பதில் மட்டும் தான் இயங்குகின்றது போலும்.
பன்றி ,டெங்கு போன்ற காய்ச்சல்கள்  வரும் போது மட்டும் சுத்தம் சுகாதாரத்தை
பற்றி சிந்திப்பது உகந்ததா?
என்னுடைய வகுப்பு தோழன் பத்திரிக்கையாளராக பணிபுரிகின்றார். அவர்   கதை கருவுக்காய் மிகவும் சிரமபடுவதை காணும் போது சில பிரச்சனைகளை நாங்கள் பகிர்வது உண்டு. ஒரு முறை , வீட்டு முற்றத்தில் குழந்தைகளை மலம் கழிக்க பழக்கும் அம்மாக்களை பற்றி கூறிய போது, இது தமிழர்களின் அடையாளம்  என வாதிட்டார்.
எனது முதுகலை  செயல்முறை பாடத்திட்டத்தின்  காரணமாக பல கிராமங்கள் செல்லும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது.பல வீடுகளின் வாசல் படியோடு சேர்ந்து கழிவு நீர் செல்லும்  வழி (கால்வாய்) காணலாம். பல அம்மாக்கள் அக்-கழிவு நீர் கால்வாய்களில் தன் குழந்தைகளை  காலைக்கடன் செய்ய அனுமதிக்கின்றனர்.

இச்சுகாதார  சூழலை எண்ணியே  எங்களுடைய வீடு கட்டும் நிலம் புறநகர் பகுதியாக இருக்க வேண்டும் என விரும்பினோம். எப்போழுதும் சுத்தமான காற்று ,வீட்டை சுற்றி மரம் என கனவுகளோடு குடிபுகுந்தோம். 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து  ஒரு குடும்பம் வாடகைக்கு குடி வந்தது.அவர்கள் வீட்டு இரண்டு சிறு குழந்தைகள்  ஒவ்வொரு  முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் "அம்மா ஆய் வருது" என கூறி தெருவுக்கு வந்து விடுவார்கள். காலையில் எழுந்த உடன் கோலம்,சூரியனுக்கு காலையும் மாலையும் வணக்கம் என இயற்க்கையும் வணங்குகின்றனர்.
பைபிளில், மலம் கழிக்க ஒரு செயல் விளக்கம் கொடுத்துள்ளார்கள். மலம் மனித குடியிருப்பிலாகாது. கையில் ஒரு கம்பு போன்ற ஆயுத்தால் குழி எடுத்து  அதை உபயோக படுத்தி விட்டு மூட சொல்லபட்டுள்ளது. நம்மவர்களூம் பின் பற்றலாம்.
சிலருக்கு இயற்க்கை உபாதை இயற்க்கையோடு இருந்தால் தான் வரும் என கேள்வி பட்டுள்ளேன்.  அரசு ஊழியராக பணிபுரியும் ஒரு நபர் காலையில் அவருடைய இரு சக்கர வாகனத்தில் காலைக்கடன் செலுத்த செல்வார். அவருடைய மனைவியும், அவருடைய தாயாரும் நடந்து பின்பே செல்வர். எனது கற்பனை இவ்விதமாக செல்லும்  , நான்கு சக்கரவாகனம் வாங்கினால் எல்லோரும் குடும்பத்துடன் செல்லுவார்கள் போலும்!.
   

1 comment:

  1. புறநகரான பள்ளிக்கரணை, ஊரப்பாக்கம் பக்கம் வந்து விடுங்கள், சென்னையும் நெல்லையும் கலந்த ஒரு வாழ்வை வாழலாம் (தாமிரபரணி மட்டும் மிஸ்ஸிங் ஆகும்)

    ReplyDelete