30 May 2011

தமிழனை இளிச்சவாயனாக்கும் தமிழக ஊடகம்!


சமீப நாட்களாக இணையத்துடன் சங்கமித்துள்ளதால் செய்தி தாள், வார இதழ் இணையம் வழி பெறப்படுவதால் பத்திரிக்கைகள் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பதை மறந்திருந்தேன்.  சுயபுராணமற்ற கருத்தாக்கமுள்ள பல கட்டுரைகள் மற்றும் செய்திகள் இணையம் வழி தேடி கண்டுபிடிக்க இயல்வதால் வலையே சரணம் என்று சமீப நாட்களாக போய் கொண்டிருந்தது என் வாசிப்பு உலகம்.

கடந்த நாளில் ஆனந்த விகடன் என்ற பத்திர்க்கை வாங்கும் சூழலுக்கு தள்ள பட்டேன். ஒரே பத்திரிக்கை அலுப்பை தரும் என்பதால் தொடர்ந்து ஒரே பத்திக்கை வாசிக்கும் வழக்கம் இல்லாதிருந்தது எனக்கு.     ‘சண்டே இந்தியன்’ போன்ற பத்திரிக்கை செய்திகள் மேட்டு குடி மக்களுக்கு என ஆகிய போது ஜூனியர் விகடன், நக்கீரன் போன்றவை  கொலை கற்பழிப்பு  புறம்-கூறுதல் என தன் வாசகர்களை இட்டு சென்ற போது; ‘இந்திய டுடே’ போன்ற பத்திரிக்கைகள் சாரமற்ற அரசியல் விவாதித்த போது, குமுதம் குங்குமம் போன்றவையோ  சினிமா செய்திகளாகவே வழங்கியது ஆனந்த விகடன் போன்றவை கொஞ்சம் துணிவுள்ள, சிறப்பாக ஆளும் வர்கத்தை கேள்வி கேட்கும் செய்தி தருகின்றது என கண்ட பொது ஆனந்த விகடன் பரவாயில்லை என்ற தோன்றல் அதுடன் ஒரு ஈர்ப்பு உருவாக காரணமானது.

இந்த வாரம் ஆனந்த விகடன் ஒரேடியாக தன் சுய புராணம் பாடுவதை கண்டபோது ஆனந்த விகடன் மேல் இருந்த பிரியவும் வெயிலை கண்ட பனி போல் உருகுவதாக உணர்ந்தேன்.  15 ரூபாய்க்கு வாங்கி 15 மணி நேரம் வாசிக்க தகுந்த செய்திகள்   பெற இயலவில்லை என்பதே என் வருத்தம்! வரட்சியான குளறுபடியான எழுத்து நடை ஆழமற்ற அர்த்தமற்ற செய்திகள் பத்திர்க்கை நேர்த்தியற்ற வார்த்தை பிரயோகம் தற்பெருமை கொண்ட கட்டுரைகள் என அணி வகுத்து இருந்தது.

உதாரணமாக ஒரு அரசியல் கட்டுரையின் தலைப்பு இப்படியாக இருந்தது “டீக் கடைக்காரர் நீதி அமைச்சர் மாடு மேய்த்தவர் கால் நடை அமைச்சர்”. டீக் கடை வைத்திருப்பவர் எந்த விதத்தில் குறைந்தவர் பல பேருக்கு வேலை தருகின்றார்;  மேலும் மாடு மேய்த்தவர் என்ற கட்டுரையிலுள்ள அமைச்சர் அந்த கால பியுசி படித்தவர் அவர் விவசாய தொழில் செய்பவராம்.  சாதாரண மக்களின் அடையாளப்படுத்தல் தான் பத்திரிக்கையுடையதுமா? அடுத்தவர்களை அவர்கள் செய்யும் தொழில், ஊதியம் சார்ந்து குறைவாக இடைபோடும் இழிவான குணம் நம் இந்திய தமிழர்களிடம் மட்டும் முள்ள அற்ப குணம் ஆகும். பத்திரிக்கை எழுத்து வழியாகவும் இதையையா போதிக்கின்றது பத்திரிக்கைகள்!!  ரோமில் பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூறினார் வெளிநாட்டில் கழிவறை கழுபவர்களும், பொரியாளரும் மனிதர்கள் என்ற நிலையில் ஒரே மதிப்பே பெறுகின்றனராம்.  மனிதரை மனிதராக பார்க்கும் பண்பு நம்மவர்களுக்கு மிகவும் குறைவே.   மனிதனை விட அவன் பார்க்கும் தொழில் வருமானமே கண்ணில் தெரிவதாக நாம் உணர்ந்தது உண்டு பல இடங்களில்.   தமிழக சூழலில் அரசு ஊழியர்கள் அழுக்கு படாத  சட்டையணியும் அதிகாரிகள்  தவிர்த்து மற்றவர்களை இளக்காரமாக பார்ப்பதும் பேசுவதும் சகஜமே. இதை தான் பத்திரிக்கைகளும் போதிக்கின்றதா?  மாடு என்று அழைப்பது கூட இந்திய கலாச்சாரம் என்ற நிலையில் சரியானதா ‘பசு’ என்று  அழைத்து கோமாதாவாக வணங்கும் மக்கள் கொண்ட நாட்டில் அதை பராமரிப்பவரை இந்த அளவு இளக்காரமாக வர்ணித்து புகழத் தான் வேண்டுமா?

 பத்திரிக்கையை வாங்கி  வாசிப்பவர்கள் அதை புகழ வேண்டும் பத்திரிக்கை தன் பத்திரிக்கையை பற்றி தன் எழுத்தால் புகழ்ந்தால் அதன் அர்த்தம் என்ன ?, தங்கள் தரத்தில் தங்களுக்கே சந்தேகம் வந்து விட்டது என்பது தானே. இது ஆனந்த விகடன் மட்டுமல்ல ‘இளைய தலைமுறை’ போன்ற பத்திரிக்கைகளுக்கும் இதே நோய் உண்டு தான்.  தாங்கள் மட்டுமே சரியான பத்திரிக்கை நடத்துவதாக பீற்றி கொள்வார்கள்.  ஆனால் உண்மையில் மக்கள் நலன் கொண்டு வரும் கட்டுரைகள் மிகவும் குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

பக்கங்களை புரட்டியால் சினிமா துணுக்குகள் சினிமா செய்திகள் தான் அதிக இடங்களை ஆக்கிரமித்திருக்கும்(17 பக்கம்). அடுத்தது விளம்பர பக்கங்கள் 16 பக்கங்களில் இடம் பிடிக்கின்றது.  மக்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அரசியல் செய்திகள் வெறும் 10 பக்கங்கள் அதிலும் 4 பக்கம் செய்தி கனி மொழியில் கண்ணீர் கதை!( பாதிப்படைந்த இந்திய மக்களின் கதையல்ல) கற்பனை கதைகளுக்கு 14 பக்கங்களுக்கு தேவைப்பட்ட போது பொது அறிவு செய்தி கள் வெறும் 10 பக்கங்கள்.

படங்களை எடுத்து கொண்டால்   சினிமா கலைஞர்கள் படங்கள்  32 ஆக இருந்த போது அரசியல் வாதிகள் 23 படங்களில் இடம் பிடிக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் படங்கள் தபால் தலை அளவே காண இயன்றது.  சினிம பிரபலங்கள் அரசியல் வாதிகளின் சிலரின் படம் தான் முழு  மற்றும் அரை அளவில் காட்சி தந்தது.  அன்னா ஹஜாரா என்ற சமூக புரட்சியாளரை பற்றியுள்ள கட்டுரைக்கு கூட அவரின் படம் கிடைக்காது காந்தி தாத்தாவின் படமே இட்டுள்ளனர்.

தொலைகாட்சி பக்கம் போய்விடலாம் என்றால் அங்கு பொருட்களின் விளம்பரம், சில சாமியார்களின் அறிமுகம், ஆட்டம் பாட்டு என்றே போய் கொண்டிருக்கின்றது.  

மக்களுக்கு ஊடகம் என்ற கருவி வழியாக செய்திகள் கொணரபட்டு சிந்தனை வளம் முள்ளவர்களாக மாற்றம் பெற வேண்டி இருக்கும்  போது யாருடையோ தேவைக்கான செய்திகளை விசு போன்ற பஞ்சாயத்து  - நாட்டாமைகளின் வழியாக மக்கள் மனதில் புகட்ட முற்படுகின்றனர்.  பகுந்து ஆராய்தல் , கலந்துரையாடல் என்பதை விடுத்து விசுவின் ஞானோபதேசம் மக்களுக்கு நேரடியாக கொடுக்கின்றனர்.   ஒரு பெண் சொல்கின்றார் வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி விசு ஏதோ நாட்டாமை போல் வேலை நாட்டில் கொட்டி கிடக்கின்றது, செய்ய தான் ஆளில்லை வேலை இல்லாதவர்களை என்னை பார்க்க சொல்லுங்கள் நான் வாங்கி கொடுக்கின்றேன் ஆனால் கிடைத்த வேலையில் கேள்வி கேட்காது சேர்ந்து வேலை செய்ய வேண்டுமாம்!!!  

விசுவின் பேச்சு பல பொழுதும் நம் சகிப்பு தன்மையை சோதிப்பது போல் மட்டுமல்லாது அவரை மேதாவி என்று காட்டி கொள்வது போலவே உள்ளது.  பங்குபெறுபவர்களின்  கருத்தை வெளி கொண்டுவராது, அவற்றை ‘காற்றில் பறக்கும் தூசி’ போல் கருதி புரக்கணிப்பது மட்டுமல்லாது அவரின் நியாங்களை நிலைநாட்டவே விரும்புவார்.  அவருக்கு பலபொழுதும் கிரீடம் வைக்காத பேரரசர் என்ற நினைப்பு உண்டு.  அவரின் உடல் மொழி வாய்மொழி  கூட  சுதந்திரமான கருத்துரயாடலை தகர்த்து எறியும் ஹிட்லர் மொழி போன்றே உள்ளது.   வரும் நாட்களில் அவர் வீசி கொண்டிருக்கும் துண்டுக்கு பதிலாக கத்தி , துப்பாக்கி கொண்டு வந்து மக்களை மிரட்டும் காலங்கள் உண்டு  என்பதை மறக்கலாகாது.

சரி, திரைப்படம் பார்த்தாவது காயம் பட்ட மனதை தேற்றி கொள்ளலாம் என்றால் ‘ராம்’ படம் ஓடி கொண்டிருக்கின்றது.  அதில் ஒரு ஆங்கிலபள்ளி ஆசிரியை அவர் மகனை ‘நீ கடவுள் பிள்ளையடா’ என்று சொல்லி வளர்க்கின்றார்.  குந்தி தேவி ‘சூரியனை பார்த்து கர்ணன் வந்தான் என்று சொன்னது போல்’. ஹிந்து சாமியார் சிவப்பு குங்குமம் தர்மம் என பிதற்றி ஹிந்து மதத்தையை கொல்லா கொலை செய்கின்றனர்.  கதை முடிவில்  மிடுக்கான போலிஸ் அதிகாரியை மாணவன் குருவியை சுடும் போல் கொன்று விடுகின்றானாம்!!

இப்படியாக ஊடம் தமிழர்களை இன்னும் புரிந்து செயல்படாது அவர்களை முட்டாள் ஆக்குவதாகவே தெரிகின்றது.  தமிழக பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு  பின்புலனை துறந்து, தேடுதல் அற்ற வெத்து வேட்டாக இருப்பது மட்டுமல்லாது மக்களையும் அர்த்தமற்ற நிலையில் தள்ளுகின்றனர். வலைப்பதிவுகள் மற்றும் இணையம் வழியாக வரும் எழுத்துக்கள் இவைகளை கண்டாவது ஊடகம் தன்னை திருத்த முயலாவிடில் வரும் நாட்களில் மக்கள் ஊடகத்தை என்று என்றைக்கும் வெறுக்கும் காலம் சமீபத்தில் வரும் என்று மறக்கல் ஆகாது!!!!

2 comments:

  1. ஒப்பீட்டளவில் வணிக ஏடுகளில் ஆனந்த விகடன் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது என்பது உண்மைதான். குறிப்பிட்ட அந்த இதழினை நான் பார்க்கவில்லை. தலைப்பில் டீ கடைக்காரர் அமைச்சர், மாடு மேய்த்தவர் அமைச்சர் என்று இருந்தாலும் கட்டுரைக்கு உள்ளேயும் அப்படி இளக்காரமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா அல்லது இப்படிப்பட்ட தொழில்களைச் செய்தவர்களும் அமைச்சர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மெச்சுகிற தொனியில் எழுதப்பட்டிருக்கிறதா? அதைக் கொண்டே மதிப்பிட இயலும். மற்றபடி பெரும்பாலான வணிக ஊடகங்கள் தற்போதைய உலகமய பொருளாதாரச் சுரண்டலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலையை வளர்க்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

    ReplyDelete