20 Sept 2011

கேரளா மீன் கறி/குழம்பு ரெடி!!(Fish Curry)


மீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும்.  சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது உண்டு.  சிறுவகை மீன்கள் தான் குழம்புக்கு அதீத ருசியை தருவதாக உள்ளது.  ஆட்டிறச்சி கிலோ 400 ரூபாய் கோழி கிலோ 140 ரூபாய் என்ற விலை ஆகி விட்ட நிலையில், தற்போது மீன் தான் எப்போதும் எந்நிலையிலும் வாங்க தகுந்த உணவாக பல தரப்பட்ட மக்களுக்கு உள்ளது.  கேரளத்துகாரர்கள் தேங்காய் சேர்க்காது மீன் குழம்பு வைக்கவே விரும்புகின்றனர்.  இருப்பினும் தேங்காய் சேர்த்தும் மீன் கறி வைப்பது உண்டு. கேரளாவில் கடும் சிவப்பு நிறத்துடன் மீன் கறி விரும்பும் போது சில தமிழக பகுதியில் சிவப்பில் பச்சை கலந்த நிறத்துலுள்ள மீன் கறியை சுவைத்து உண்ணுகின்றனர்.  பொதுவாக நாகர்கோயில் கன்னியாகுமாரி, தூத்துகுடி பகுதியில் வைக்கும் மீன் கறியே மிகவும் சுவையானது. மீன் வகைகளிலும் உவரி கடல் மீனுக்கு சிறப்பான இடம் சுவை உண்டு.  

விளைமீன் இன்று கறிவைக்க வாங்குவோம். விளைமீனுக்கு முள்ளும் செதலும் அதிகமாக உண்டு எனிலும் கறிக்கும் பொரிக்கவும் சுவையான வகை மீன் இதுவே. தற்போது மீன் கடைகளில் சுத்தப்படுத்தி தருவதால் மீன் கறிவைக்க அதிகம் சிரமமும் இல்லை!

வாங்க, இனி சமையல் அறையில் வேலையை பார்த்து கொண்டே கதைப்போம்.
மீனை நன்றாக ஓடும் தண்ணீரில் கழுகவும்.
மீன் கறிக்கு மீனின் தலை பக்கம் தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சின்ன உள்ளி (வெங்காயம்)தேவையான அளவு உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
தேங்காய் ஒரு கப்பு துருவி கருகாது வறுத்து மைய்போல் அரைத்து எடுத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
ஒரு தக்காளி சிறிது வாளம் புளிகரசல். கேரளாவில் புளிகரசிலுக்கு பதிலாக குடம் புளி சேர்ப்பார்கள்.4 பச்சை மிளகாய்.தேவையான அளவு உப்பு . (மீன் கறிக்கு உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்க்க வேண்டிவரும்.)
தேவையான மசால் பொருட்கள்:
மிளகாய் தூள் 1தேக்கரண்டி
மல்லி தூள் 2 கரண்டி
மஞ்சள் தூள் மிகவும் சிறிய அளவு. ¼ கரண்டிக்கும் குறைவாக
கடுகும், ஜீரகம்,வெந்தயம் எண்ணைய் சேர்க்காது வறுத்த தூளாகியது  ¼ கரண்டி, 
அல்லது

மீன் குழம்பு பொடி என்றே இப்போது கடைகளில் கிடைக்கின்றது. ஈஸ்டேன் மீன் மஸாலா என்றால் கேரளா கறி நிறத்துடன் கிடைக்கும்.  ஆச்சி மஸாலா தென் தமிழக உவரி, நாசரேத் மீன் கறி சுவைக்கு ஒத்துபடி  கிடைக்கின்றது.  4 கரண்டி போதுமானது.



மீன் கறி மண் பாத்திரத்தில் வைத்தால் சுவை இன்னும் சிறப்பாக அமையும்.
மீன் சட்டியை அடுப்பில் வைக்க பலரும் பயப்படுவது உண்டு. மீன் சட்டி வாங்கியதுன்  சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி சிறு சூடில் கொதிக்க வைத்து 1 வாரம் பழக்கினால் சண்டை போட்டு உடைக்கும் வரை சட்டி உடையாது இருக்கும்!
சமையல் வேலையை ஆரம்பித்து விடுவோமா?
முதலில் சட்டியில் தேங்காய் அரைத்து வைத்த கரசல், பொடிகள் , தக்காளி, புளி கரசல் சேர்த்து மீன் துண்டுகளும் அத்துடன் இட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கறி வத்தி மசாலா சேர்ந்து வந்ததும்; வேறு ஒரு  சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
பின்பு தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய் ஊற்றி சூடாகியதும் கடுகு இடவும்.
கடுகு கரியாது பொரிந்த்தும் வெட்டி வைத்துள்ள வெங்காயம் அரைத்து வைத்துள்ள இஞ்சி+வெள்ளப்பூடு விழுதும் குறுகை கீறிய பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதங்கியதும் கொதித்த  மீன் குழம்பில் கொட்டி மூடி வைத்தவுடன் அடுப்பையும் அணைத்து விடுங்கள்.

 ½ மணி நேரம் கழிந்து இதமான சூட்டில் சாதம் சப்பாத்தி, தோசை அல்லது பண், இடியாப்பத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடித்து விடலாம்.



7 comments:

  1. JOSEPHINE மாம்
    படித்த உடன் தோன்றியது ...
    உடன் சமைக்க வேணும் ..
    ருசித்து சாபிடவேண்டும் ..
    அழகான ருசியான பதிவு
    வாழ்த்துக்கள்
    யானைக்குட்டி

    ReplyDelete
  2. இது புரட்டாசி மாசமாச்சே... என்ன செய்ய?

    ReplyDelete
  3. வீட்டுகாரமா கிட்ட சொல்லி செய்ய சொல்லுறேன் :)

    ReplyDelete
  4. நாங்கள் (மலேசியர்) தாளித்த பிறகு குழம்பு வைப்போம். இங்கே குழம்பு வைத்த பிறகே தாளித்துள்ளீர்கள். வித்தியாசமாகவே இருந்தது. நன்றி மேடம், மண் பானையை பாதுகாக்கும் வழியைச் சொல்லிக்கொடுத்தமைக்கு.:)

    ReplyDelete