6 May 2015

How ald are you? உங்கள் வயது என்ன?


35 வயதை கடந்த ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விருவிருப்பான திரைக்கதையுடன்   தொகுத்துள்ள குடும்பப் படம்" ஹவ்  ஓள்ட் ஆர்  யூ ?"  (உங்க வயது என்ன?)  இத் திரைப்படம் ஊடாக மஞ்சு வாரியர் 14 வருடம்  கழிந்து மறுபடியும் திரை உலகிற்கு காலெடுத்து வந்துள்ளார்.   இதே படம்  தமிழில் ஜோதிகா நடிப்பில் சூரியா தயாரிப்பில் வரவுள்ளது.  இரு படங்களுடைய இயக்குனர்  ரோஷன் ஆண்ரூஸ் என்பவராவார்.  மலையாளத்தில் சிறப்பாக ஓடின இப்படம் தமிழில் எவ்வாறு வரவுள்ளது என ஆர்வமாக காத்திருக்கும் வேளையில்  மலையாள மொழியில் எவ்வாறு இருந்தது என காணலாம்.                                                                                                                                                                                                                                                                                                         

நிருபமா ( மஞ்சு வாரியர் ) ஒரு அரசு அலுவலகத்தில் வேலை நோக்கும் ஒரு குமஸ்தா.  அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெரும்வாரியான மக்களின் அதே சோம்பல்,  திமிர்.  பொறுப்பின்மை.  ஏதோ அலுவலகம் வந்தோமா சம்பளத்தை வாங்குனோமா என்று வாழும் சராசரி வாழ்க்கை. கணவர் ஒரு தனியார் வானொலி ஊடகத்தில் வேலை பார்க்கின்றார். பதின்ம வயதில் ஒரு மகள்.  சிறந்த ஒரு வாழ்க்கையை தேடி வெளிநாடு செல்ல இருந்த இவர்களில்  கணவருக்கு மட்டும் அயர்லாந்தில் கிடைக்கின்றது. வயது காரணத்தை கொண்டு மனைவிக்கு விசா கிடைக்க தாமதம் ஆகுகின்றது. அப்பாவும் மகளும் வெளிநாட்டுக்கு போக தயாராகுகின்றனர். இவ்வேளையில் நாட்டின் அதிபர் பள்ளிக்கு வருகை தந்திருக்கும் வேளையில் மகள் கேட்ட கேள்விக்கு பதில் என்ற வண்ணம்,  அதிபரிடம்  சந்தித்து பேசும் அழைப்பு தாய் நிருபமாவுக்கு வருகின்றது. மகள் என்ன கேள்வி கேட்டிருக்க கூடும் என மகளிடம் கேட்டால் வெளிப்படுத்த அவள் விரும்பவில்லை. இந்நிலையில்  நாட்டின் அதிபரை சந்திக்க செல்லும் நிருபமா அங்கு பாதுகாப்பு என்று நடக்கும் ஆர்பாட்டத்தின் மத்தியில் அதிபரை கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விடுகின்றார்.  இந்த சம்பவத்தால் நாட்டின் ஊடகம் தான் வேலை பார்க்கும் அலுவலகம், ஏன் வீட்டிலும் கணவர் மகளின்  கேலிக்கு உள்ளாகுகின்றார்.                                                                                                                                                                                                                            

        இத்தருணத்தில் அவர் கல்லூரி தோழியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. கல்வி கற்கும் காலங்களில் இருந்த ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும்  வாழ்க்கையை எதிர் கொண்ட விதம், அதன் விருவிருப்பை எங்கு தொலைத்தாய் என வினவுகின்றார். பெண்கள் எப்போதும் தனக்கான ஒரு கனவை பேண வேண்டும் என கூறி வாழ்கையை ஆக்க பூர்வமாக நோக்க வற்புறுத்துகின்றார்.  இப்படி இருக்க  நிதம் தான் பயணிக்கும் பேருந்தில் சந்திக்கும் வயதான மூதாட்டியை காண ,  வீட்டில் பேணி வளர்த்த  கீரையுடன் அவர் வீட்டிற்கு செல்கின்றார். வீட்டு வேலைக்காரியாக பணிபுரியும் மூதாட்டி தன்னையும் ஒருவர் அக்கறையுடன் சந்திக்க வந்ததை கண்டு உணர்ச்சி வசப்படுகின்றார் மேலும் தன் சோகக் கதையை கூறுகின்றார்.  ஒரு பெண்ணின்  எல்லா வயதிலும் புரக்கணிக்கப்படும் சூழலை உணர்ந்து கொள்கிறார் நிருபமா.  மூதாட்டி வேலை செய்யும் ஒரு பணக்காரர் வீட்டில் திருமணத்தேவைக்கு என இயற்கை விவசாயம் மூலம் பயிரிட்ட காய்கறிக்கு ஆர்டர் கிடைக்கின்றது. பக்கத்து வீட்டு பெண்களின் மற்றும் அரசின் ஊக்கத்துடன் வீட்டின் மட்டுப்பாவில் காய்கறி பயிறிடும் விவாசாயத்தை ஆரம்பிக்கின்றார். இப்படியாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் அவர்கள் உண்ணும் உணவில் உள்ளது.  வீட்டிலுள்ள சாதாரண பெண்கள் நினைத்தால் ஒரு பெரும் மாற்றம் கொண்டு வர இயலும் என ஒரு பிரசாரமே மேற்கொள்கின்றனர் இப்படம் ஊடாக.                                                                                                                                                                                                               

இந்த நிலையில் வெளிநாடு போன மகள் தன் தாயில் அன்பை தேடுகின்றார், .  காய்கறி தோட்ட திட்டம் வெற்றி பெற்றமையால் நாட்டின் அதிபரிடம் இருந்து விருது வாங்கும் நிகழ்வு வருகின்றது. கதாநாயகி மிகவும் தன்னம்பிக்கையுடன் அதிபரை சந்தித்து பாராட்டை பெறுகின்றார். வெளிநாட்டில்  வீட்டு வேலைக்கு ஆட்களை அமத்துவது எளிதல்ல நீயும் வந்தால் சிறப்பாக இருக்கும் என  கணவர் அவரை வெளிநாட்டுக்கு அழைக்கின்றார். தான் கனவு கண்ட வெளிநாட்டு வாழ்க்கை வேண்டுமா அல்லது ஒரு நோக்கம் கொண்ட வாழ்க்கை தேர்வு செய்ய வேண்டுமா என்ற சூழலில் தான் ஒரு மனைவியாக வீட்டில் ஒடுங்கி கிடைப்பதை விட ஒரு நல்ல லட்சியத்துடன் தன்மானத்துடன் வாழ்வதே சிறப்பு என்று எண்ணி கேரளாவிலே இருந்து கொள்கின்றார்.

மஞ்சு வாரியரின் இயல்பான நடிப்பால் படம் சிறப்பாக இருந்தது.  மேலும் பெண்கள் வாழ்க்கையில் எந்த வாயதிலும் கனவுடன் ஒரு நோக்கத்துடன் வாழ கடமை பட்டவர்கள் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.  ஒரு காட்சியில் கணவர் ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு அதிர்ச்சியூட்டும்  விரும்பாத தகவலை கூறுவார். கணவன் குழந்தைகள் தங்கள் தேவைக்கு  மகிழ்ச்சிக்கு என அம்மாக்காளை பயண்படுத்துவது கேலி செய்வது அவர்களை மதிக்காது நடத்துவது இயல்பாக சொல்லப்பட்டிருந்தது. ஒரே வயதாக இருந்தாலும் கூட பெண்கள் வயதுமுதிர்ச்சியாக காணப்படுவதும் கணவரின் கவனிப்பற்று ஆசையாக ஒரு நல்ல வார்த்தை கூட கேட்காது புரக்கணிப்படும் உலக நியதியும்  காட்டப்பட்டிருந்தது.  பதின்ம வயது மகள்கள் அப்பாக்களுடம் சேர்ந்து கொண்டு அம்மாக்களை கேலி செய்வது அவமதிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டநிலையில் சில காட்சிப்படுத்தல்கள் ஊடாக பெண்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர் என்பதை திறம்பட புரியவைத்துள்ளார் இயக்குனர்.   நம்மை சுற்றியிருக்கும் சமூகம் நம்மை மதிப்பது என்பது நம் ஆளுமையை பொறுத்தே என எடுத்து கூறும் படம் ஆகும் இது.                                                                                                                                               

இப்படத்தின் மஞ்சுவாரியருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள திரைப்பட முன்னாள் கதாநாயகன் குஞ்சாக்கோ போபன் ஆகும். 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தின் மலையாளப்பதிப்பு 'அனியத்திப் புறாவில்' நடித்திருந்தவர். இது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும். அலட்டாது நடித்திருந்தார். மஞ்சு வாரியரின் வயதை குறைக்க என நிறைய மேக்கப்  பயண்படுத்தியிருந்ததை தவிர்த்திருக்கலாம், இது  செயற்கை தனமாக பட்டது.  ஒரு திரைப்படம் என்பது வெறும் களியாட்டம் பொழுபோக்கு என்பதையும் கடந்து இன்றைய நாள் நம் சமூகம் அனுபவிக்கும் பூச்சி கொல்லிபயண்படுத்தும் காய்கறி விற்பனையை தடுக்கும் பொருட்டு; கதாநாயகர்கள் மூச்சு விடாது கூறும் டயலாகை நம்பாது சாதாரண பெண்களின் பங்கை  முன்நிறுத்தியுள்ள விதம் அருமை. மலையாள மக்களுக்கு பூச்சி கொல்லி மருந்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை சிறப்பாக கொடுத்துள்ளனர். பொதுவாக பெண்களை எடுத்து காட்டாக எடுக்கும் படங்களில் ஆண்களை தரம் தாழ்த்துவது உண்டு. அது போன்ற கருத்த்தாக்கத்தை இப்படம் முன்வைக்காது  சுயநலமான உலகில் பெண்கள் சுயமாகும் வாழ வேண்டிய தேவையை அழகாக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பாடல்கள் சுமார் ரகம். காட்சியமைப்பு தேர்வு செய்த பாத்திர அமைப்பு சிறப்பாக இருந்தது.  முதல் முறை நாட்டின் அதிபரை சந்திக்கும் நிகழ்ச்சி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கதைக்கு அழுத்தம் தர எடுத்த யுக்தியாக எடுத்து கொள்ளலாம். மகளாக நடித்திருந்த குழந்தையின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அங்கு இன்குமாக சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த "இங்லீஷ் விங்லீஷ்" படம் தாக்கம் தெரிகிறதை தவிர்க்க இயலவில்லை!


இந்த படத்தின் கருத்தை பற்றி கேரளா சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. கேரளா assemblyமேலும் இப்படத்தில் கதாநாயகி தன் சொந்த வாழ்கையிலும் பதின்ம வயது மகளை கணவர் திலீபின் பராமரிப்பில் விட்டு விட்டு விவாகரத்து பெற வேண்டிய சூழலுக்கு உள்ளானர்வர்.

0 Comments:

Post a Comment