12 Jul 2015

பெண்ணின் கருவறையும் கற்பகிரகவும்


நேற்று மருத்துவமனையில் கண்ட இளம் பெண்ணின் சிரிப்பில் இருந்த சோகம் சில சம்பவங்களை நினைவூட்டி கொண்டிருந்தது. நானும் அத்தானுடன் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல். அவரோ டென்னீஸ் பார்ப்பது போல் பார்வையால் நேரம் போக்கி கொண்டிருக்கின்றார். நோயாளி தீவிர கவனிப்பு அறையில் இருப்பதால் குளிரூட்டப்பட்ட அறை, தனி கவனிப்பு என்று தூங்கி கொண்டிருக்கின்றார். நோயாளியுடன் இருப்பவர்களுக்கு தான் மருத்துவமனையின் பிரத்தியேக சத்தம், கழிவறை நாற்றம் என அல்லல் படவேண்டி வருகின்றது.  நோயாளிகளின் உறவினர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய இருக்கைகளும்   தொலை நோக்கு பார்வை இல்லாது வசதியற்ற  நிலையில் உள்ள தான் நம் இடுப்பு வலியையும் தாங்கி தான் இருக்க வேண்டியுள்ளது. 


மருத்துவ மனைகள் நோயாளிக்கு ஆனது மட்டுமல்ல என்ற நோக்கில் வருங்காலத்திலாவது  இயற்கை காற்று புகிரும் வண்ணம், சில செடி கொடிகளுடன் கட்டமைக்க வேண்டும். காணும் இடம் யாவும் உயிரற்ற சுவருகளும் அழுக்கு படிந்த நடை பாதைகள் மூச்சடைக்கும் நாற்றம் என எரிச்சல் கொள்ள வைக்கின்றது.   இவையும் தாண்டி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் மைதானமாகவும் மருத்துவ மனை நடைபாதைகளை பயண்படுத்துவது விழிப்புணர்வு இன்மையை காட்டுகின்றது.

அந்த இளம் தாயின் தாய், தன் ஆதங்கத்தை மிகவும் நிதானமாக கொட்டி கொண்டிருந்தார்.   எதிர்பார்த்த நாட்களை விட பிரசவம்  3 வாரம் முந்திவிட்டதால் குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை எடுத்து வரை இயலவில்லை. முன்கூட்டி பிறந்த குழந்தை என்பதால் மருத்தவ தனி கண்காணிப்பில்  இருக்க வேண்டிய சூழல். தாய், பால் கொடுக்க மட்டும் சென்று திரும்புகின்றார்.   கடினமான பிரவ நாட்களில் ஒரு தாய்க்கு ஆறுதலாக இருப்பது தன் மார்போடு சேர்ந்து உறங்கும் குழந்தை தான். அக்குழந்தையின் அருகாமையும் அருகில் இல்லை என்பது தாயின் சிரிப்பையும் மீறி சோகம் கண்ணில்  ஓடுகின்றது. 

குழந்தையின் தாய்க்கு இப்படியான வருத்தம் என்றால் சேயின் தாய்க்கு தன் மகளுக்கு பிரசவத்தோடு கொடுக்க வேண்டிய கவனிப்பு, உணவு  கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம். வீட்டில் இருக்கும் மருமகள் சமைத்து கொடுக்கும் மனநிலையில் இல்லையாம். மகனிடம் கூறின போது  நான் அண்ணியிடம் சொல்ல இயலாது நீங்கள் அப்பாவிடம் கூறி அண்ணனிடம் சொல்ல சொல்லுங்கள் என கூறி சென்றாராம். 

உறவின் மாட்சிமையில் நிலைகொள்ளும் நம் குடும்ப அமைப்பில் இது போன்ற மனப்பாங்குகள்  பொறுப்பின்மை உறவின் அர்த்தத்தை மறைக்க செய்கின்றது.   மகளை காண வந்த  மாமியார் வீட்டினரோ தங்கள் பாட்டிற்கு சில உபதேசங்களை போகும் வழியே சொல்லி மறைகின்றனர்.


இதே மாமியார் குழந்தை வளர்ந்து வரும் போது தன் வாரிசு என கொண்டாடுவதும் பெண் வீட்டார் ஒதுங்கி இருந்து பெண்ணின் சுகங்களை காணும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.   தன் வயதான நாட்களில் தன் மருமகள் தயவில்  சேவையும் மகன் உதவியுடன்  அதிகாரத்தில் பெறும் நிலையில் தான் உள்ளனர் . பெண் குழந்தைகள் அற்ற வெறும் மகன்களை மட்டும் வளர்க்கும் தாய்மார்கள் இரக்க குணத்தில் சிறிது பிந்தங்கி இருப்பதாகவே  சொல்கின்றனர். 

பொதுவாக முதல் பிரசவம் வரை மென்மையாக வளரும் பெண்கள் மனதில் வன்மம் வளரவும் முதல் பிரசம் காரணமாகின்றது. என்ன தான் காலாகாலம் கொண்ட முறை என்றாலும் பிரசவ நேரம் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடு இல்லாது அளவற்ற அரவணைப்பு, அன்பு பெரிதும் தேவையாக உள்ளது.  ஆனால் நம் கலாச்சார சூழலில் முதல் பிரசம் என்பதை 'முறை' என்ற பெயரில் பெண் வீட்டார் தலையில் முளகரப்பதற்கும் பெண் வீட்டாரிடம் தங்கள் அதிகாரத்தை நாட்டவும் முறை பெற மட்டுமே பயண்படுத்துகின்றனர் எனபது மிகவும் வருந்த தக்கது. இது போன்ற சூழலை எதிர் கொள்ளும் பெண்களால் ஒரு கடமை என்பதை கடந்து அன்பால் நேசத்தால் மாமியாரை ஒரு போதும் நோக்க இயலாது. 

இவையும் போதாது என்று பிரசம் ஆன தாய்மார்களை மருத்துவ மனை நிர்வாகம் வழி பாதைகளில் கட்டில் போட்டு கிடத்தியிருப்பது பெரும் அவலம். பல பெண்களுக்கு பிரசம் பின்பு நரம்பு சம்பந்தமான நோய்கள், கர்ப்பபை தொற்று என பல நோய்களுக்கு உள்ளாகவும் இது காரணமாகின்றது. இது போன்ற சூழலை முன் கூட்டியை கண்டு தான் இறைவனை வழிபடும் தலமாக கற்ப கிரகத்தை உருவகப்படுத்தியுள்ளனர். நம் இறை நம்பிக்கை வழிமுறைகள் எல்லாம்  வாழ்க்கையோடு ஒட்டாது வெறும் ஆசாரமாகவே முடிவுறுவதும்   சமூக அவலம் தான்.

சமூக மாற்றம் என்பதை தனி நபர் விருப்பம், மாற்றம் என்பதை கடந்து    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால் கணவருக்கு விடுப்பு மட்டுமல்ல உடன்  இருந்து கவனித்து  கொள்ளவும் பயிற்சி தேவை. பிரசவ நேரம் கணவன் அருகாமையை சட்டத்தால் நடைமுறைப்படுத்த வேண்டும். பிரசவம் என்பதின் வலியை பெண் மட்டும் ஏற்று கொள்ளாது ஆணும் சரிசமமாக பங்கிட்டு கொள்ளவேண்டிய சூழல் அமைய வேண்டும். பிரசம் என்பதை பெண்வீட்டார் கடமையாக பார்க்காது ஆண் வீட்டாரும் தங்கள் சுமையை ஏற்கும் சூழலுக்கு இறங்க வேண்டும்.

1 comment:

  1. குழந்தை பெறும் பெண்கள் எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெற்றுக் கொள்ள வேண்டு அப்படி பெறும் பெண்கள் பாக்கியவதிகள் என்றே சொல்ல வேண்டும். அது போல பிறந்த குழந்தையை ஆண்கள் எப்படி கையாள்வது என்பதற்கு இங்கு பயிற்சியும் கொடுக்கிறார்கள் அப்படி பயிற்சி பெற்றுதான் நான் என் குழந்தையையும் மனைவியையும் கவனித்து கொண்டேன் யாருடைய உதவி இல்லாமலும்

    ReplyDelete