30 Aug 2015

கின்னி கோழி முட்டையும் ரத்னா பாய் பாட்டியும்



என் அப்பா வழி பாட்டிக்கு தன் 65 வயது என்பது,  தன் நினைவாற்றலை இழந்து வரும் காலமாக இருந்தது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவரான தாத்தா பாட்டியை தாத்தாவின் பராமரிப்பில் வைத்து தனியாகவே கவனித்து வந்த காலம் அது.  பாட்டிக்கு ஒரே  ஒரு வேலை அதுவும் பிடித்த வேலை கின்னி கோழியை வளர்ப்பதாக  தான் இருந்தது. அவரால் மண்ணெய், சமையல் எண்ணையை வேற்படுத்தி பார்க்கும் தெளிவு இல்லை. எப்போதும்  கோழிகளை விரட்டுவதற்கு என கரண்டியை கையில் வைத்திருப்பார் . பாட்டி வாய் திறந்து பேசினதே நினைவில்லை. ஆனால் கோழிகளுடன் கதைப்பதை திட்டுவதை கண்டுள்ளேன். எப்போது பார்க்க சென்றாலும் பாட்டி கோழியின் பின்னால் நடந்து கொண்டே இருபார். கின்னி கோழி தன் முட்டைகளை காட்டில் இடும் வழக்கம் உள்ளது. பாட்டி அதை தேடி சென்று எடுத்து வருவதுடன் ஒவ்வொரு முட்டையும் அழகாக ஒரு கண்ணாடி  பெட்டியில் அடுக்கி வைத்திருபார். வீட்டு வழி,  நடைபாதை,   படிகட்டுகள்  என நடக்கும் இடங்களில் எல்லாம் அதன் எச்சத்தால் நிரப்பி இருந்தது.  

அவர்கள் தங்கி இருந்த வீடு ரோட்டு ஓரத்தில் இருந்தது. முன் பக்கத்தை 4 கடைகளாக வாடகைக்கு விட்டிருந்ததால் வீட்டிற்கு செல்ல பின் வழியாக ஒரு குறுகிய பாதையில் இறக்கத்தில் நடந்து சென்று சில படிகள் இறங்கி இன்னும் 20  படிகள்  ஏறி வீட்டிற்குள் செல்ல வேண்டும்.  எங்கள் ஊரோ எப்போது மழையும் வழுக்கும் பாதைகளாக இருந்ததால் தாத்தா வீட்டிற்கு செல்வதை தடை விதைத்திருந்தார் அம்மா! அம்மாவின் தடை என்பது அது 144 தடைசட்டம் போன்றது. ஆனால் கின்னி கோழி முட்டை ஆசை என்னை விட்டு வைப்பதில்லை. சில நேரம் அம்மாவின் அனுமதி இல்லாதும், தங்கை தம்பியை அழைத்து சென்றால் காட்டி கொடுத்து அடி வாங்கி தருவார்கள்; என்பதால் தோழி ஒருவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளேன்.

முட்டையை கண் வைத்தே அங்கு செல்வது  பாட்டிக்கும் தெரியும். முட்டையை பார்க்க பெட்டிக்கு அருகில் சென்றதுமே "எடுத்து விடாதே தாத்தாவிற்கு" என கட்டளை பறந்து வரும்.  பாட்டி பெட்டி அருகிலே மிகவும் கவனமாக நோட்டமிட்டு கொண்டே அமர்ந்திருப்பார்.

பாட்டியின் உலகம் முழுக்க தாத்தா தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் நேசித்து இருக்க வேண்டும்.  பெரியப்பா காதல் மணம் முடித்தார் என  பெரியப்பா பிள்ளைகள் வீட்டிற்கு வரத் தடை இருந்தது. தாத்தா இல்லாத நேரம் நோக்கி அங்கு செல்லும் என் பெரியப்பா மகன்களுக்கு   பழம் கஞ்சி கொடுத்துள்ளார் என கூறியுள்ளனர். என் பாட்டி எப்போது ஒரு மயான அமைதியில் பைபிள் வாசிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முகத்திலோ கண்களிலோ எந்த உணர்வையும் காட்டி கொள்வதில்லை. கண்கள் மட்டுமே சலித்து கொண்டிருக்கும்.  அவர் உணர்வுகள் என்பது, வெத்தலை இடிக்கும் கல் ஓசையுடன் முடித்து இருந்தது.


தாத்தாவிற்கு நான் மிகவும் பிடித்தமான பேத்தி. அவருடைய துணிமணிகளை அவராக தைத்து அணிவது தான் பிடிக்கும். வெள்ளை சட்டை,  அரைகை வைத்த உள் பனியன் தைத்து அணியுவார். வயதாகிய வேளையில் நூல் கொருப்பது, உண்ணிப்பாக கவனித்து தைப்பது சிரமம் என்பதால் அவர் வெட்டி வைத்திருக்கும் துணியை தாத்தாவின் கட்டளைக்கு இணங்க தைத்து கொடுப்பது என் வேலையாக இருந்தது.   


கின்னி கோழி முட்டை சாதாரண கோழி முட்டையை விட மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்.  4-5 முட்டைகளை ஒரே பாத்திரத்தில் உடைத்து போட்டு தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் மிளகும் உப்பும் போட்டு  ரொட்டி போன்று சுட்டு தருவார். நான் பல போதும் முட்டை சாப்பிட்டதை வீட்டில் சொல்வது கிடையாது. ஒவ்வொரு முறை கின்னி கோழிகளை பார்க்கும் போது பாட்டி நினைவு வராது இருப்பதில்லை.



தாத்தா வேட்டைக்கு போகும் வழக்கம் இருந்ததால் காட்டு இறச்சி சமைத்து எனக்காக கொண்டு கொடுப்பார். கொல்லாண்டி சீசனில் ஒரு சின்ன பையில் எனக்கான பங்கு வந்து சேரும்.  அதை தீயில் சுட்டு எடுப்பதே தனிக்கலை. கங்கு தீயில் இட வேண்டும். அதன் பால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... என்ற சத்ததுடன் எரிந்து போன பின்பு கொல்லம் கொட்டயை லாவகமாக குறுக்கலாக வைத்து கொண்டு உடைக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்தால் கையில் கருப்பு அடையாளங்களுடன்  பல போதும் சுட்டு விடும். பொதுவாக வியாபாரி வீடுகளில் நல்ல காயை விற்று விடுவதால் பொக்கு தான் வீட்டு தேவைக்கு வரும். சுடும் போது சில நேரம் பருப்பு இல்லை என்றால் அம்மா திட்டி கொண்டே எடுத்து தந்தாலும் தாத்தா கொண்டு வந்து கொடுத்த கொல்லாண்டி நினைவுகள் தான் தற்போது ஆக்கிரமித்துள்ளது.  

Image result for grandparents painting
பாட்டி இறந்து 28 வருடங்கள் ஆகி விட்டன.  தாத்தா இறந்தும் 20 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் என்னுடன் முட்டை தின்று வந்த   தோழி அம்மாவிடம் சென்று வந்த கதைகளெல்லாம் கூறி உள்ளார் என்று அறிந்த போது இனி அம்மாவிடம் அடிபடப்போவதில்லை என அறிந்தாலும் என்னை அறியாத பயம் தொற்றியது. 

தாத்தாவின் அன்பை கூறும் போது என் மகன்கள்  கேட்பார்கள் "ஜோசப் தாத்தா இப்போது எங்கு இருப்பார்"  அம்மா என்று. அப்போதெல்லாம் நான் வானத்தை காட்டி அங்க பார் ஓர் நச்சத்திரம் நம்மை பார்த்து நின்று கண் சிமிட்டுகின்றது  என காட்டி கொடுப்பேன்.சமீபத்தில் என் மகன்களின் தாத்தா இறந்தார். என் மகன்கள் அவர் எங்கு இருபார்  என கேட்டதே இல்லை. என் மகன்களுக்கு என்னுடைய தாத்தாவின் நினைவுகள் போல் ஏதோ சில நினைவுகளை இட்டு சென்றுள்ளனரா என்று எனக்கு தெரியாது.

3 comments:

  1. கின்னி கோழிகளைப் படத்தில் பார்த்ததும் என் அப்பா வளர்த்த கின்னிகோழிகளை நினைவு கூற செய்து விட்டது

    ReplyDelete
  2. நெகிழ்ச்சி தரும் நினைவுகள்.

    ReplyDelete